Skip to main content

''இதன் மூலம் அவர் சில கோடிகளை இழக்கலாம்..!'' -  தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பெருமிதம்!

Published on 05/05/2020 | Edited on 05/05/2020
hhu

 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதை போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. அதனால் அத்துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...


''இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா. அதனால்தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன. இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான். இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும். ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் படங்கள் ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியதுதான். நடிகர், நடிகைகள், டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை.

 

 


இதற்கு ஒரு முற்றுபுள்ளி வராதா, எங்கள் பாரங்களை தோளோடு தோள் சேர்த்து தூக்கி செல்ல யாரும் வரமாட்டார்களா என நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, தமிழ்சினிமாவின் தற்போது தவிர்க்க இயலாத ஹீரோ விஜய் ஆண்டனி அவர்கள் தாமாகவே முன்வந்து தனது சம்பளத்தில் 25% வேண்டாம் என அறிவித்து அவர் நடித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், நல்ல மனிதராகவும் இருப்பதால் மட்டுமே திரு.விஜய் ஆண்டனி அவர்கள் தயாரிப்பாளர்கள் சார்பாக யோசித்து எங்கள் வலியை உணர்ந்து இப்படி ஒரு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளார். இதன் மூலம் சில கோடிகளை அவர் இழக்கலாம். ஆனால் பல கோடி நெஞ்சங்களில் அவர் நிலைத்துவிட்டார். 

 


கரோனாவிற்கு பின் வரும் கடின காலக்கட்டங்களில் சினிமா துறை என்ன ஆகும், எப்படி இந்த இழப்புகளில் இருந்து முன்னேறும் என்ற அனைவரும் கலங்கி நிற்கும் போது. ஒரு வழிகாட்டியாக, ஒரு முன்மாதிரியாக விஜய் ஆண்டனி தற்போது வெளிவந்துள்ளார். இவரைபோல மற்ற அனைத்து நடிகர், நடிகைகள், டெக்னிசியன்கள் அனைவரும் இதைபோல சம்பளத்தை குறைத்து பாரத்தை தயாரிப்பாளருடன் தோளில்  சுமந்து செல்ல தயாராக இருந்தால், எந்த இடர் வரினும் தமிழ் சினிமா வீழாது. பீனிக்ஸ் போல எழுந்து நிற்கும். இது நாம் ஒன்றிணையும் நேரம். எங்களுக்காக தோள் கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பில் ஒரு பெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்