ரவி மோகன் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் ‘ப்ரோ கோட்’ படத்தை தயாரித்தும் வருகிறார்.
இந்த நிலையில் ரவி மோகனுக்கு எதிராக பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர்கள் தொடர்ந்து மனுவில், “எங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடு ஊதியமாக பேசப்பட்டு முன்பணமாக ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்கிறார். அதனால் முன்பணமாக பெற்ற பணத்தை திருப்பி தர ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் மனுதாரரிடம் பெற்ற முன் பணத்தில் ரவி மோகன், சொந்த படத் தயாரிப்பிற்கோ அல்லது சொந்த செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்புள்ளதால் ப்ரோ கோட் படத்தை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அதே போல் வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் ரூ.6 கோடிக்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.6 கோடி முன் பணம் பெற்றது உண்மைதான். ஆனால் கால்ஷீட் கொடுத்தும் படப் பணிகளை படக்குழுவினர் துவங்காததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக ரூ.10 கோடி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பாபி டச் தயாரிப்பு நிறுவனத்தின் மனுவிற்கு ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.