ரவி மோகன் தற்போது 'ஜீனி', 'கராத்தே பாபு' 'பராசக்தி' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் 'ப்ரோ கோட்' படத்தை தயாரித்தும் வருகிறார்.
இந்த சூழலில் ரவி மோகனுக்கு எதிராக பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், “எங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.15 கோடி ஊதியமாக பேசப்பட்டு முன்பணமாக ரூ.6 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்கிறார். அதனால் முன்பணமாக பெற்ற பணத்தை திருப்பி தர ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பிற்கு ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து ரவி மோகன் தரப்பில் பாபி டச் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் கொடுத்த மனுவில், ஒப்பந்தப்படி கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு தொடங்காததால் தனக்கு ஏற்பட்ட நிதி இழப்பீடு தொடர்பாக ரூ.9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனு தாரருக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கையும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டு வழக்குகளும் கடந்த மாதம் ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில், பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ரவி மோகனுக்கு ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில்... அதாவது இன்றைய தினத்துக்குள்(20.08.2025) தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, நீதிமன்ற விதித்த உத்தரவின் படி, சரியான தேதிக்குள் ரவி மோகன் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அதனால் அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். அப்படி மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் கோரிக்கை குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.