ரவி மோகன் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ ‘பராசக்தி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தவிர்த்து ‘தனி ஒருவன் 2’ படத்தை வைத்துள்ளார். இதனிடையே ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருந்தார். இதன் பேனரில் முதல் படமாக ‘டிக்கிலோனோ’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘ப்ரோ கோட்’(BRO CODE) என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை தயாரிப்பதோடு நடிக்கவும் உள்ளார். எஸ்.ஜே.சூர்யாவும் இதில் நடிக்கவுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழாவை ரவி மோகன் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். இதில் ரவி மோகன், அவரது தோழி பாடகி கெனிஷா, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ரவி மோகன் தயாரிக்கும் ‘ப்ரோ கோட்’ படத்தின் பூஜை நடைபெற்றது. அதோடு இன்னொரு சர்பிரைஸாக அவரும் ஒரு படம் இயக்கபோவதாக அறிவித்துள்ளார்.  அப்படத்தை அவரே தயாரித்து ஹீரோவாக யோகி பாபு நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்திற்கு ‘அன் ஆர்டினரி மேன்’(An Ordinary Man) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் அதற்காக புரொமோவையும் வெளியிட்டார். இப்படம் அவர் தயாரிக்கும் இரண்டாவது படமாக தயாராகிறது. இப்படத்தின் பூஜையும் அதே நிகழ்வில் நடந்தது. 

இப்படங்களைத் தவிர்த்து புதுமுக இயக்குநர், திறமையான இளைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர்களை வைத்து இந்தாண்டு ஒரு படம், அடுத்த ஆண்டு மூன்று படங்கள், அதற்கடுத்த ஆண்டு 4 படங்கள் என அனைத்து படங்களின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஓடிடி தளங்களில் பிக்சனில் 2026ஆம் ஆண்டு ஒரு புராஜெக்ட், 2027ஆம் ஆண்டு இரண்டு புராஜெக்ட் மற்றும் நான் ஃபிக்சனில் 2026ஆம் ஆண்டு 2 புராஜெக்ட், 2027ஆம் ஆண்டு 2 புராஜெக்ட் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நல்ல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் சூழலில் அப்படங்களுக்கும் உதவும் விதமாக 2025ஆம் ஆண்டி இருந்து 2027ஆம் ஆண்டு வரை 10 படங்களுக்கு ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் உதவியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல் சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 2025ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை 10 கலைஞர்களின் புராஜெக்டுகள் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.