
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் 171 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் இன்று (12.06.2025) மதியம் 1.30 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட 5வது நிமிடத்திலே திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த பெரும்பாலோனோர் பலியாகியுள்ளனர். இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். இதுவரை 133 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் சொல்கின்றன. மேலும் விடுதியில் இருந்த மாணவர்களும் பலியாகியுள்ளனர். அங்கு 5 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு 20 மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் விபத்து தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விமான விபத்து குறித்து பிரதமர் மோடி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே நடிகர் ரவி மோகன், “அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன், கடவுள் அவர்களுடன் இருப்பார்” என தனது எக்ஸ் பக்கத்தில் தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.