Skip to main content

"கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை" - ராஷ்மிகா வேதனை

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

rashmika mandana about his fake viral video

 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்துள்ளார். 

 

தொடர்ந்து படங்களில் பிசியாக நடிக்கும் ராஷ்மிகா, தற்போது அவரது எக்ஸ் பக்கத்தில் வேதனயடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக அரை குறை ஆடையுடன் ராஷ்மிகா இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் வருவது ராஷ்மிகா கிடையாது, எடிட் செய்து ராஷ்மிகா முகத்தை மட்டும் இணைத்துள்ளதாக சிலர் கமெண்ட் செய்து வந்தனர். 

 

இந்த வீடியோ அதிகம் வைரலானதை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், இந்த விவகாரம் தொடர்பான வீடியோவை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இது எடிட் செய்யப்பட்டதென கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஷ்மிகா வேதனையுடன் பகிர்ந்த பதிவில், "இதைப் பகிர்வதில் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். மேலும் என்னை வைத்து எடிட் செய்து பரப்பப்படும் போலியான வீடியோவை பற்றி நான் பேச வேண்டும். 

 

நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ரொம்ப பயமாக உள்ளது. என்னை பற்றி மட்டுமல்ல தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படுவதால் அதில் பாதிக்கக்கூடிய அனைவரையும் பற்றி. இன்று ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் என்னுடைய குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது போல் நான் பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போது எனக்கு இது நடந்திருந்தால், அதை எப்படி சமாளித்திருப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதுபோன்ற அடையாளத் திருட்டால் நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படுவதற்கு முன், இதை நாம் கவனிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்