Rashmika on her experience working with Dhanush in Kuberaa

தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியை தனுஷ் தனது மகனுடன் சென்று ரசிகர்களுடன் பார்த்தார். பின்பு பட இயக்குநர் சேகர் கம்முலாவும் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். இப்படத்திற்கு சாய் பல்லவி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் படம் வெற்றி பெற தங்களது எக்ஸ் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நாயகி ராஷ்மிகா, படத்தில் பணியாற்றியவர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ள அவர், “அற்புதமான மனிதர்களோடும் திறமையான நடிகர்களோடும் பணிபுரியும் போது நம்முடைய பெரிய பொறுப்பு என்னவென்றால், அவர்களின் நடிப்பை மேம்படுத்துவதற்கு நாமும் நன்கு நடிக்க வேண்டும். நடிப்பில், ஒரு சூழ்நிலைக்கு எவ்வாறு ரியாக்ட் செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால் தனுஷ் போன்று ஒரு சிறந்த நடிகர் இருக்கும் போது வேறு வழியே இல்லை. அவருடன் ஸ்க்ரீன் ஷேர் செய்யும் போது அவரது நடிப்பை கெடுக்காமல் இருந்தாலே போதும். தேவாவோடு சமீராவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப நன்றியுள்ளவராக உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் இதில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்திலும் ராஷ்மிகா சமீரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment