Skip to main content

“ரஜினியை இயக்கியவர் என்னையும் இயக்குவது எனக்கு வாழ்நாள் சாதனை” - ரம்யா பாண்டியன் 

Published on 23/06/2025 | Edited on 23/06/2025
ramya pandian about suresh krishna

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் சாருகேசி. இப்படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேவா இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் வீடியோ வடிவில் பேசிய மோகன்லால், “சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இந்தப் படம் அனைவரிடமும் சென்று மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த நாடகம் பார்த்ததும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்களை சினிமா என்றும் கைவிடாது. அதற்கு எடுத்துக்காட்டு ஒய் ஜி மகேந்திரன் சார், அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். நேரத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனது குரு பாலச்சந்தர் சாருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாருகேசி படத்தை அனைவரும் குடும்பமாக சென்று பார்க்க வேண்டும்” என்று பேசினார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசும்போது, “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணாவுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படம் பார்த்துட்டு அனைவரும் உறவுகளை மதிப்பார்கள். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சுரேஷ் கிருஷ்ணா சார் வந்து என்னை பாராட்டினார், அது எனக்கு மிகவும் ஊக்கத்தை கொடுத்தது. ரஜினி சாரை இயக்கிய ஒருவர் என்னை வைத்து இயக்குவது எனக்கு வாழ்நாள் சாதனையாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒய் ஜி மகேந்திரன் சார், சுகாசினி மேடம் அவர்களுடன் நடித்தது பெருமையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்