பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ராக்கி சாவந்த், தமிழில் ‘என் சகியே’, ‘முத்திரை’ உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் டெல்லியைச் சேர்ந்த ஆதில் கான் குரானி என்பவரைக் காதலித்து வந்த நிலையில், இருவரும் சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஆதில் கான் ஒரு ஆங்கில ஊடகத்தின் பேட்டியில் இந்த திருமண தகவலை மறுத்துப் பேசினார் .
இது தொடர்பாக நடிகை ராக்கி சாவந்த், ஆதில் கான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவரின் போனில் சில விஷயங்களைப் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வேறொரு பெண்ணுடன் ஆதில் கானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி மும்பை ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அதில் கான் மீது மீண்டும் ஒஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் ரூ.5 லட்சம் பணம், ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை காணாமல் போனதாகவும் அதை அதில் கான் தான் கட்டிட காவலாளி மூலம் எடுத்து சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக அதில் கான் மீது வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே நடிகை ராக்கி சாவந்த் ஒஷிவாரா காவல் நிலையத்தில் அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் கானை விவாகரத்து செய்யவுள்ளதாக தெரிவித்து அவர் மீது பல குற்றங்களை சுமத்தினார். அப்போது பேசிக்கொண்டிருக்கையில் திடீரென மயங்கிவிழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி எழுப்பி தண்ணீர் கொடுத்து சரி செய்தனர். இது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை ராக்கி சாவந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு ரித்தீஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இப்போது ரித்தீஷ் சிங் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வீடியோ மூலம் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "ராக்கியின் பக்கம் உண்மை இருக்கிறது. ஆனால் அதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதைப் பற்றி ராக்கி மூன்று மாதங்களுக்கு முன்பு என்னிடம் கூறினார். அவர் கூறுகையில் அவர் பொய் சொல்லவில்லை என தெரிந்து கொண்டேன். இந்த விவகாரத்தில் நான் ராக்கியின் பக்கம் நிற்பேன். லவ் ஜிஹாத்தில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு இது ஒரு பாடம்" என்றார்.