“நாட்டிற்கே பெருமை” - இளையராஜாவை கௌரவித்த நாடாளுமன்றம்

Rajya Sabha chairman Jagdeep Dhankhar offers tributes to music composer Ilaiyaraaja in parliament

இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இசைஞானி இளையராஜா, 35 நாட்களில் தான் எழுதி முடித்த முழு சிம்பொனியை ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையைப் படைத்​தார்.

இதனைத் தொடர்ந்து லண்டனில் இருந்து தமிழகம் திரும்பிய இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவை சந்தித்து மாபெரும் சாதனை படைத்ததாக பாராட்டு தெரிவித்தார். மேலும் இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் எனவும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இப்படி இளையராஜாவுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வர தற்போது நாடாளுமன்றத்தில் இவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இளையராஜாவை கௌரவித்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், “லெஜண்ட்ரி இசையமைப்பாளர் இளையராஜா ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தனது இசையால் இந்திய சினிமாவை வடிவமைத்துள்ளார். அதற்கு வெகுமதியாக இசைஞானி என அழைக்கப்படுகிறார்” என ஆரம்பித்து இளையராஜாவின் சாதனைகளை வரிசையாகக் குறிப்பிட்டார். அப்போது அவையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இறுதியில் ஜகதீப் தன்கர் இளையராஜாவின் சமீபத்திய சாதனையான சிம்பொனி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இதற்காக ஒட்டு மொத்த நாடும் நாட்டு மக்களும் பெருமைப் படுகின்றனர் எனக் கூறினார்.

Ilaiyaraaja Parliament
இதையும் படியுங்கள்
Subscribe