Skip to main content

சிகிச்சை பெறும் பொன்னம்பலம்... ரஜினிகாந்த் உதவி!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
ponnambalam

 

தமிழ் சினிமாவில் சண்டைக் கலைஞராக அறிமுகமாகி பின்னர் வில்லன், தற்போது காமெடி நடிகராக வலம் வருபவர் பொன்னம்பலம். 

 

சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை அடையாறு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய சிகிச்சைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் உதவியுள்ளார். தினமும் பொன்னம்பலத்தின் உடல்நிலை குறித்து தொலைபேசியின் மூலம் விசாரித்தும் வருவதாக செய்திகள் வெளியாகின.

 

மேலும் இந்த சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினையும் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனிடையே வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் பொன்னம்பலம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உதவிய நடிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு 52 வயதாகிறது, வீட்டிலிருக்கும்போது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அறிந்த சரத்குமார் சார் உடனடியாக என்னை மருத்துவமனையில் சேர்க்க பண உதவி செய்தார். பின்பு அங்கு முழுமையாக பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரக செயலிழப்பை உறுதி செய்தனர். மேலும், நுரையீரலில் நீர் சேர்ந்திருப்பதற்கு சிகிச்சை அளித்தனர். இதனை அறிந்த விஷால் - கார்த்தி இருவரும் அடையாற்றில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் போதுதான் கமல் சார் பேசினார்.

 

"இப்போதைய காலகட்டத்தில் இதெல்லாம் சரி செய்துவிடலாம். எதற்கும் கவலைப்பட வேண்டாம். உனது குழந்தைகளின் கல்விச் செலவை நான் பார்த்து கொள்கிறேன். வேறு என்ன உதவி வேண்டுமானாலும் அழைக்கவும்" என்று நம்பிக்கையூட்டினார்.

 

பின்பு எனது நிலையை அறிந்து ரஜினி சார் பேசினார். "எதற்கும் கவலைப்பட வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பேசுகிறேன். நான் பார்த்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார். அடுத்த நாள் ரஜினி சாருடைய மனைவி பேசி, "கவலை வேண்டாம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பேசியிருக்கிறோம். ரஜினி சார் சொல்லச் சொன்னார்" என்று தெரிவித்தார். மேலும், வீட்டுச் செலவுக்கும் பண உதவி செய்தார்.

 

விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். எனக்கு உதவிய, நம்பிக்கையூட்டும் விதமாக பேசிய அனைத்து நடிகர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.