பிரபல இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் இன்று உடல்நலக் குறைவு காரணமாக பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக் கபூர் அவருடைய அம்மாவுடன் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு இருந்தார். சீதோஷண நிலை மாற்றத்தால் அவரது உடல்நிலை அங்கு போன அடுத்த நாளே மாற்றமடைந்துள்ளது. மேலும், கடுமையான மூச்சு திணறலும், அதிகப்படியான சளியும் இருந்துள்ளது. இதற்கிடையே இன்று அவரின் உடல்நிலை மோசமாகி அங்கேயே பலியாகியுள்ளார். 23 வயதே நிறைவடைந்த ஷாரூக்கின் மரணம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் உடல் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பெரிய அளவில் இந்திய அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் என்று சொல்லப்படுகின்றது.
ஷாரூக்கின் அப்பாவின் திரைப்பயணம் மிக நீண்ட வரலாறு உடையது. தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் கனகா கதாநாயகியாக நடித்திருப்பார். இதை தொடர்ந்து அஜித்துக்கு பெரிய புகழை கொடுத்த அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய வெற்றிப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். மேலும், உத்தமராசா, குஸ்தி என்ன விலை அழகே, சரத்குமார் நடிப்பில் சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட பல படங்கள் இவரின் கைவண்ணத்தில் உருவானது. இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் முத்திரை பதித்தவர் ராஜ்கபூர். தென்னவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். மகனின் இறப்பால் துயரத்தில் இருக்கும் அவருக்கு சினிமா பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.