Skip to main content

ஹிட்டாக என்ன காரணம்; இணையத்தில் 'விஸ்வாசம்' பற்றி பகிர்ந்த கொண்ட ரஜினிகாந்த்

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

rajinikanth talk about viswasam movie

 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 'விஸ்வாசம்' படத்தை பற்றியும், இயக்குநர் சிவா குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட குரல் பதிவில், " அனைவருக்கும் வணக்கம். பேட்ட படம் முடிந்த பிறகு  நான் பார்த்தேன். அதில் ரொம்ப ஸ்டைலா கட்டியிருந்தார்கள். பேட்ட வெளியான அன்றுதான் இயக்குநர் சிவா இயக்கியிருந்த விஸ்வாசம் படமும் வெளியாகியிருந்தது. 

 

ad

 

இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். இரண்டு படத்துக்கும் நல்ல வரவேற்பு. சரி 'விஸ்வாசம்' படத்தை பார்க்கலாம் என்று  சொல்லி பார்த்தேன். படம் நல்லா இருந்தது. இன்டர்வல் வந்தது. அப்போ இந்த படம் இவ்ளோ பெரிய ஹிட் ஆக என்ன காரணம் என்று யோசனை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாம் பாதி பார்த்தேன்.  க்ளைமாக்ஸ்    நெருங்க நெருங்க படத்தோட கலரே மாறி  க்ளைமாக்ஸ்   எக்ஸ்சலெண்டா இருந்தது. சூப்பர் படம். என்னை அறியாமல் கை தட்டினேன். தயாரிப்பாளர் தியாகுவிடம் இயக்குநர் சிவாவை பார்த்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினேன். அதன்பின் சிவா வீட்டுக்கு வந்தார். கள்ளங்கபடம் இல்லாத ஒரு குழந்தை மாதிரி உண்மையாக பேசினார். சிவாவை எனக்கு பிடித்திருந்தது " எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ஒரு வசனம் - ஆக்ரோஷமாக கத்தும் சூர்யா

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
suriya kanguva teaser released

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதில் கடந்த நவம்பரில் சென்னையில் நடந்த படப்பிடிப்பின் போது, ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்பு ஓய்விற்காக வெளிநாடு சென்று பின்பு சென்னை வந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தின் கிளிம்ஸ் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், கடந்த பொங்கலை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.  

இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு அறிவித்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். சூர்யா டப்பிங் செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு சற்று தாமதமாக வெளியானது. டீசரில், பீரியட் ட்ராமா ஜானருக்கே உரித்தான கப்பல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் எனப் பல அம்சங்கள் இடம்பெறுகிறது. மேலும் சூர்யாவிற்கும் பாபி தியோலுக்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமெனத் தெரிகிறது. இரு தரப்பிற்கும் நடக்கும் மோதலே படக்கதையாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. டீசரில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வசனம் வருகிறது. அதுவும் சூர்யா ஆக்ரோஷமாக ‘பெருமாச்சி..’ எனக் கத்தும் காட்சியாக இருக்கிறது. பட வெளியீடு குறித்து டீசரில் சொல்லவில்லை. விரைவில் அது குறித்த அப்டேட் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

சாந்தியும் சமாதானமும் உண்டானதா? - ‘லால் சலாம்’ விமர்சனம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
lal salaam review

வள்ளி படத்தில் ஆரம்பித்து குசேலன் படம் வரை சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பிறகு ரஜினிகாந்த் பெரும்பாலும் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களில் போதிய வரவேற்பைப் பெற்றதில்லை. அந்த நீண்ட நாள் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கௌரவ தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் லால் சலாம் திரைப்படம் வென்றதா இல்லையா?

தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். 

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.


லால் சலாம் - மத நல்லிணக்கம்!