Skip to main content

"என்னங்க மணிரத்னம் இப்படி பண்றாரு..." - கமலிடம் கலங்கிய ரஜினி

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

rajinikanth shares thalapathy movie memories ponniyin selvan audio launch

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று முந்தினம் நடைபெற்றது. 

 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, தளபதி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அப்போது தளபதி படத்தின்போது ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். மணி சாருடன் முதல் காம்பினேஷன். முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்று, நல்லா பளிச்சின்னு மேக்கப் போட சொன்னேன். ஏன்னா, மம்முட்டி ஆப்பிள் நிறம் போல் இருப்பார்..  நான் கருப்பாக இருந்தேன். 

 

என் ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்டியூமை கொண்டு வர சொன்னேன். எனக்கு லூசா பேண்ட், பனியன், செப்பல் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி, நான் வழக்கமாக அணியும் பேண்ட், சர்ட் அப்புறம் நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்து கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு போனேன். மணி சார் என்னை பார்த்ததும், என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா? சேஞ்ச் பண்ணிட்டு வந்திருங்கன்னு சொன்னார். 

 

மாத்தியாச்சு சார் இதுதான்னு சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டு. அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தார். ரொம்ப நேரமாச்சி   வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்ல. முதல் நாள் ஷூட்டிங் ஷோபனாக் கூட, ஷோபனா எல்லாரையும் கலாய்க்கிற பார்ட்டி. அவர்கிட்ட கேட்டா சரியா தெரியும்ன்னு நினைச்சி, என்ன நடக்கிறது, இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்கவே இல்லன்னு  கேட்டேன். 

 

 

அவரும் விசாரிச்சுக்கிட்டு வந்து, என்னாச்சி.. டைரக்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா.. இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்.. வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சுட்டு.. அப்புறம் ஹீரோவா கமல போட்டுடலாம்ன்னு பேசிகிட்டிருக்காங்கன்னு சொன்னதும், அப்பதான் புரிஞ்சது. நம்ம இஷ்டத்துக்கு மேக்கப் டிரஸ், ஷூவெல்லாம் போட்டுக் கிட்டு வந்தது தப்புன்னு புரிஞ்சது. முதல் நாளே என் கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்கிறது என்று, அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் என்பதை மணி சொல்ல  கேள்விப்பட்ட பிறகு அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்தி கொண்டு வந்து நடிச்சேன். அப்படி மணி சார் ஒரு கண்டிஷனான இயக்குநர்.  

 

இப்படயே  மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்னு ஒரு 'டெம்ப்ளேட்' வெச்சிருப்போம். இதிலேயும் அப்படிதான் நடிச்சுக்கிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது இன்னும் ஃபீல்... கொடுங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டேயிருந்தார். இதுக்கு மேல என்ன ஃபீல் பண்ண.. நாமதான் ஒரு டெம்ப்ளேட் வைச்சிருக்கோமே..அப்படிதான் நடித்து முடித்தேன். 

 

நான் அப்போ நடிச்சிகிட்டு இருந்ததெல்லாம், ‘தூக்குடா.. அடிடா.. அப்படித்தான்’.எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது. தினமும் இது இப்படியே போய்க்கிட்டு இருந்தா சரியா வராதுன்னு நினைச்சி, கமலுக்கு போன் பண்ணி.. ஒரு  சீனுக்கு 10 டேக்.. 12 டேக்கெல்லாம் எடுக்குறாரு. இன்னும் கொஞ்சம் ஃபீல் பண்ணி நடிக்க சொல்றாரு. அப்படி நடந்ததை எல்லாம் சொன்னேன். 

 

மணி படம் நீங்க நடிக்கும் போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனீங்களா.. மணி கிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்.. அப்படின்னார். சரி இப்போ என்ன பண்ணலாம்னு கேட்டேன், “ஒண்ணு பண்ணுங்க, எப்படி நடிக்கணும்னு அவரையே நடிச்சுக் காட்டச் சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திக்கிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்க”என்று சொன்னார். 

 

நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்டச் சொல்லி, அதை அப்படியே தம் பிடிச்சுக் கிட்டு அங்கு இங்குமா நடந்து கிட்டு பெருசா பீல் பண்ண மாதிரி பொய் சொல்லித்தான் மணிகிட்ட நடிச்சு முடிச்சேன்” என்றார். ரஜினி நடந்ததை கூற கூற அரங்கத்தில் இருந்த  மணிரத்னம் உள்பட அனைவரும் சிரிப்பலையில் மிதந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரட்டை வேடத்தில் சிம்பு - வெளியான லேட்டஸ்ட் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
simbu to act double getup in kamal maniratnam thug life

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தச் சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தேர்தல் முடிந்த பின்புதான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு துல்கர் சல்மானுக்கு பதில் சிம்புவும், ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படத்தின் லேட்டஸ்ட் தகவலின்படி, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் சிம்பு வேறொரு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் நடிகர்கள் விலகவும் இணையவுமாக தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் தெளிவான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, கமல் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.   

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.