கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இதில் 6 நாட்கள் கலந்து கொண்டு நடித்து முடித்துவிட்டார். ஜூலை மாதம் படம் வெளியாகவுள்ளதாக தெரிவித்தார். இப்படத்தை அடுத்து கமலுடன் இணைந்து ஒரு படம் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் பட இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை.
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை ரஜினிகாந்த் வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக இடைப்பட்ட காலங்களிலும் பின்பு கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளும் இமயமலை போகாமல் இருந்தார். பின்பு ஜெயிலர் படம் முடிந்ததும் 2023ஆம் ஆண்டும் வேட்டையன் படம் முடிந்ததும் கடந்த ஆண்டும் இமயமலை போனார். ஆனால் கூலி படம் முடிந்த பிறகு போகவில்லை.
இந்த நிலையில் தற்போது இமயமலை சுற்றுப்பயணம் ரஜினி மேற்கொண்டுள்ளார். இன்று காலை இமயமலைக்கு புறப்பட்ட ரஜினி இன்று ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்குகிறார். நாளை பத்ரிநாத் செல்கிறார். அதன் பின்பு பாபா குகைக்கு செல்ல உள்ளார். இப்போது ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருக்கும் அவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.