Skip to main content

“அவருக்கு தெரிந்ததை எல்லாருக்கும் தெரிய வேண்டும் என பாடுபடுவார்” - ராஜேஷ் குறித்து ரஜினி

Published on 31/05/2025 | Edited on 31/05/2025
rajini tribute to actor rajesh passed away

திரைத்துறையில் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45-ஆண்டுகளில் 150 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். பின்பு முன்னணி பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த வகையில் கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சின்னத்திரையிலும் நடித்து வந்தார். இதனிடையே ஓம் சரவண பவ யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். இதைத் தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.

இந்த சூழலில் ராஜேஷ்(76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று முன் தினம்(29.05.2025) அதிகாலை காலமாகினார். மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக கூறப்பட்டது. இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என பலரும் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு நாளை(01.06.2025) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அவரது மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர் வரும் வருவதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவரது மகள் இன்றே வந்துவிட்டதால் இன்றே ரஜேஷின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ரஜினி தற்போது ராஜேஷின் இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “எனக்கு மட்டும் இல்லை, நிறைய பேருக்கு ராஜேஷ் நெருங்கிய நண்பர். அவர் பெரிய ஹீரோவோ, குணச்சித்திர நடிகரோ, டைரக்டரோ, அரசியல்வாதியோ கிடையாது. இருந்தாலும் முதலமைச்சரில் இருந்து இளையராஜா தொடர்ந்து எல்லா பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தியிருக்காங்க. இது அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்கு ஒரு சான்று. அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது. உலக சினிமா, அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம் என எல்லாமே அவருக்கு தெரியும். அவ்ளோ தேடுவார். அவருக்கு தெரிந்ததை எல்லாருக்கும் தெரிய வேண்டும் என பாடுபடுவார். அந்தளவு நல்ல மனிதராக வாழ்ந்தார். என்னை அடிக்கடி சந்திப்பார். ஆரோக்கியமா எப்படி இருக்கனும் அதற்கு என்னென்ன சாப்பிடனும்னு சொல்வார். அவர் இப்போது திடீர்னு இல்லைன்னு சொல்றது, பெரிய அதிர்ச்சியா இருக்கு. அவருடைய இழப்பு பேரிழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைட்டும்” என்றார். முன்னதாக ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் ராஜேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்