தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் ஆரம்பக்காலத்தில் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே மற்றும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களும் இந்த லிஸ்டில் அடங்கும். கடைசியாக இருவரும் ‘அல்லாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் நடித்திருந்தனர். இப்படம் 1979ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் அடுத்தக் கட்டத்திற்கு நகராமல் போனது. இந்த நிலையில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரஜினி, கமல் உள்பட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ரஜினி - லோகேஷ் கனாராஜ் கூட்டணியில் கூலி படம் கடந்த 14ஆம் தேதி வெளியாகி கலவையான விம்ரசனத்தை பெற்று வருகிறது. ஆனால் வசூல் ரீதியாக 4 நாட்களில் ரூ.400 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். இந்தாண்டு இறுதியில் பணிகள் தொடங்கவுள்ளதாக கைதி படத் தயாரிப்பாளரும் தெரிவித்திருந்தார். இப்படத்தை முடித்துவிட்டு பாலிவுட்டில் ஆமிர் கானை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இப்போது வந்திருக்கும் தகவலின் படி, கைதி 2 படம் தள்ளி போவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்தார் என்பதும் இப்படத்தை கமலே தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.