rajini condolence to ratan tata passed away

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக மறைந்துள்ளார். இவரது மறைவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ரத்தன் டாடா மறைவுக்கு தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திரை பிரபலங்களும் ரத்தன் டாடா மறைவுக்கு எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான், “சில ஆளுமைகள் வாழும் பாடபுத்தகமாக இருப்பார்கள். தலைமைத்துவம், வெற்றி மற்றும் வாழ்க்கை மரபுகள் குறித்து நமக்கு கற்றுக் கொடுப்பார்கள். அவர்கள் அசாதாரணமான மனிதர்களாகவும், அதே சமயம் எளிதில் அணுகக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். நம்மை ஊக்குவித்து வழிநடத்துவார்கள். இந்தியா ஒரு உண்மையான மகனையும், சாம்பியனையும் இழந்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார்.

அதே போல் கமல்ஹாசன், “ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் எனக்கு ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் அவரை நான் பின்பற்ற முயற்சித்தேன். தேசத்தை கட்டியெழுப்புவதில் ரத்தன் டாடாவின் பங்களிப்பு நவீன இந்தியாவின் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது உண்மையான செல்வம் பணத்தை சார்ந்தது இல்லை, மாறாக அவரது நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் தேசபக்தி ஆகியவற்றில் உள்ளது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, நான் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்தபோது அவரை சந்தித்தேன். மிகவும் நெருக்கடியின் அந்த தருணத்தில், அவர் ஒரு பலமான ஆளுமையாக நிமிர்ந்து நின்றார்” எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து தனுஷ், வைரமுத்து உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது ரஜினி ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளர். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவை தனது தொலைநோக்குப் பார்வையாலும் ஆர்வத்தாலும் உலக வரைபடத்தில் இடம்பிடித்த ஒரு சிறந்த அடையாளம். ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்தியவர். பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர்.

அனைவராலும் நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்ட மனிதர். இந்த பெரிய ஆளுமையுடன் பகிர்ந்த ஒவ்வொரு நொடியையும் நான் என்றென்றும் போற்றுவேன். இந்தியாவின் உண்மையான மகன் இனி இல்லை” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment