மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் அன்மையில் திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் தமிழ்நாட்டில் மட்டும் 100கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தை பார்த்த திரைபிரபலங்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கார்த்தியை பாராட்டியுள்ளனர். இதனை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "கமல் சார், நீங்கள் எப்பொழுதும் சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய, உயர்ந்த தரத்தை அமைக்க எங்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை இது போன்ற தருணங்களில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். மிகுந்த அன்பும் மரியாதையுடன் கார்த்தி" என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் ரஜினிக்கு கார்த்தி நன்றி தெரிவித்து கூறியிருப்பது, "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணிகளை பார்த்து நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கமல் சாருடைய அற்புதமான குரலில் பொன்னியின் செல்வன் படம் அறிமுகமானது. இப்போது அதே குரல் இவ்வளவு அன்பாக படத்தை பற்றி பேசியது, எனக்கு ஒரு ரசிகரின் மனநிலைதான். தன் படத்தை போலவே முழு அன்போடு முன்னின்று பேசுவது சிறப்பு மிக்கது." என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் விக்ரம், கார்த்தி உள்ளிட்டோருடன் திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.