ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.
இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளாவின்திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதற்காக நேற்று மும்பை சென்றார் ரஜினி. மும்பையில் நடக்கும் படப்பிடிப்பில் அமிதாப்பச்சனும் கலந்துகொள்வதாக கூறப்படும் நிலையில், ரஜினி தற்போது அமிதாப்பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த அவர், "33 ஆண்டுகளுக்குப் பிறகு, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் 'தலைவர் 170' படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.