rajini about lal salaam response

ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தைத்தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். வருகிற ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 நடிக்க ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே தனது 172வது படத்திற்காக மாரி செல்வராஜுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் வேட்டையன் படப்பிடிப்பிற்காக ஹைதரபாத் சென்றார் ரஜினி. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, லால் சலாம் பட வரவேற்பு குறித்த கேள்விக்கு, “லால் சலாம் படம் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு என கேள்விப்பட்டேன். மிகப்பெரிய வெற்றியடைஞ்சிருக்கு. அதனால் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

Advertisment

அடுத்ததாக அவரிடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லி வருகிறார்கள், முதல்வர் பதவி அவ்வளவு எளிதானதாக தெரிகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” என கூறி தவிர்த்துவிட்டார். பின்பு வேட்டையன் பட பணிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் 20 சதவீதம் இருக்கு. இந்த படம் முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் படம் தொடங்கும்” என்றார்.