
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் ஏர் இந்தியா விமானம் கடந்த 12ஆம் தேதி மதியம் லண்டன் நோக்கி புறப்பட்டது. அப்போது விமானத்தில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் செயல் இழப்பால் புறப்பட்ட சில நிமிடத்திலேயே அருகில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்து வெடித்து சிதறியது.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 229 பயணிகள் என மொத்தம் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிசியமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக பிரதமர் முதல் பல்வேறு மாநில முதல்வர்கள் வரை அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த் இன்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரொம்ப வருத்தமா இருக்கு. ஆண்டவன் அருளால இனிமே அந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கக் கூடாதுன்னு சொல்லி இறைவனை வேண்டிக்குறேன்” என்றார். மேலும் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக தற்போது செல்வதாக கூறினார்.