Skip to main content

அரைநூற்றாண்டுக் கொண்டாட்ட நாயகன் ரஜினிகாந்த்

Published on 12/12/2022 | Edited on 12/12/2023

 

rajini 72nd birthday celebrations in world wide   

 

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வரும் வேளையில், அவரின் திரையுலக வாழ்வையும் அதனோடு தொடர்புடைய  அவரின் சுவாரசியப் பயணங்களையும் இங்கு காண்போம்.

 

பேருந்து நடத்துநராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இன்று சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் எனச் சுமார் 48 ஆண்டுகாலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளவர் ரஜினி.

 

தமிழ்த் திரையுலக வரலாற்றை எழுதும் போது ரஜினியைத் தவிர்த்து விட்டு எழுதுவது இயலாத காரியம். அந்த அளவிற்கு தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் உட்ச நிலைக்குச் சென்று, இன்றும் அந்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டும் படத்தின் நாயகனாக நடித்துக் கொண்டும் உள்ளார். அரைநூற்றாண்டுக் காலம் தன்னிடம் வைத்துள்ள சூப்பர் ஸ்டார்  என்ற பட்டமே  அவரது திறமைக்கு உரிய அங்கீகாரம்.

 

rajini 72nd birthday celebrations in world wide   

 

1975 ஆம் ஆண்டு கா.பாலச்சந்தர் இயக்கி கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த அபூர்வ ராகங்கள் படத்தில் தனக்கே  உரிய ஸ்டைலில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். வில்லன், குணச்சித்திர நடிகர் எனத் தொடர்ந்து திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தி கொண்டே இருந்த ரஜினி, பைரவி என்ற படத்தின் முழுமையாக நாயகனாகி அதன்பிறகு அடுத்த மூன்றே ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் எனும் நிலைக்கு உயர்ந்தார்.

 

கோடிகளில் வருமானம் வசூலித்த படங்களின் எண்ணிக்கையில் ரஜினியின் படங்கள் இன்றும் முதல் வரிசையில் இருக்கும். அவரே விரும்பி நடித்த ராகவேந்திரா கதாபாத்திரம் வரையிலும் எல்லாமே வெற்றி தான். அவரின் தனித்தன்மையான அபார ஸ்டைலால் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டதால்தான் உலகம் முழுவதும் ரஜினி படங்களுக்கு இன்று வரையிலும் தனி இடம் உண்டு. இவரின் நடிப்பு திறமைக்கு உரிய அங்கீகாரமாக அரசு வழங்கிய பல்வேறு விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும்  கடந்த ஆண்டு இவர் பெற்ற திரை உலக வாழ்நாள் சாதனையாளருக்கான தாதாசாகேப் பால்கே விருது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

90களில் தனது திரைப்படங்களிலும் பொதுவெளியிலும் அவரால் உச்சரிக்கப்பட்ட அரசியல் சம்பந்தமான வார்த்தைகள் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களாலும் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தன. அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்த போதிலும், வெளிப்படையாக எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியின் போது தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், அதனால் நான் அரசியலுக்கு வருவது உறுதி. நான் முன்னெடுக்க உள்ள அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்தார். பின்பு தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று பின்வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரசியலுக்கு வரலாம், வராமலும் போகலாம். அவரது ஸ்டைலில் சொல்வதென்றால் அது ஆண்டவன் சொல்வார், ரஜினி செய்வார் என்றே வைத்துக் கொண்டாலும் வரப்போகிற ஜெயிலர் படமும் அதற்கு அடுத்தபடியாக அவர் நடிக்கிற படங்களாக இருந்தாலும் ரசிகர்களை எண்டர்டெயின்மெண்ட் பண்ணிக்கொண்டே அவர் இருக்க வேண்டும். அவ்வளவு தான்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

Next Story

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா; ரஜினி - கமலுக்கு அழைப்பிதழ்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

 Kalaignar Centenary Celebration  Invitation to Senior Actors!

 

தமிழ் திரைத்துறை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களோடு எப்போதுமே இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும். அந்த வகையில் முன்னாள் முதல்வர்களான கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் பாராட்டு விழா நடத்திய வரலாறு தமிழ் திரைத்துறையினருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி கோரிக்கை வைப்பதும், பாராட்டு செய்வதும் இயல்பாக நடப்பதே. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைத்துறை சார்பாகச் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

 Kalaignar Centenary Celebration  Invitation to Senior Actors!

 

இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த விழாவிற்கான அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்த்திற்கு வழங்கினார்கள். அழைப்பின்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். ராமசாமி, செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்விற்கு வருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்திருக்கிறார். இதேபோல்,  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.