Skip to main content

“உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்” - ரஜினிகாந்த்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
rajikanth thanked all to wishes him on birthday

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு தமிழ்த் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு நபர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் முதல் ஆளுநர் ரவி உட்பட ஏராளமானோர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே அவரது ரசிகர்கள் கள்ளக்குறிச்சியில், ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் பாட்ஷா பட பாணியில் கைகளைக் கம்பத்தில் கட்டிக்கொண்டு வாயால் ரஜினிகாந்த்தின் ஓவியத்தை வரைந்தது, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் தேரை இழுத்து சிறப்பு வழிபாடு செய்தது, மதுரையில் ஒரு ரசிகர் அவரது வீட்டில் ரஜினிக்கு சிலை வைத்துள்ள நிலையில் அதற்கு பால் அபிஷேகம் செய்தது எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் மிக்ஜாம் புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் ரஜினி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கும் ஆளுநருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், அண்ணாமலை, சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்.., நண்பர் கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து, எஸ்.பி முத்துராமன், ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்.., சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.., அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்.., என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பு: பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும். உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்