ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ளபடம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ இப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (10.12.2021) இரவு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
நிகழ்வில், இந்திய உச்சநட்சத்திரங்கள் அனைவரையும் ஒரே படத்தில் இயக்கலாமே என இயக்குநர் ராஜமௌலியிடம் கேள்வி எழுப்பியபோது, "பெரிய பெரிய நட்சத்திரங்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் என்னால் இயக்க முடியும் என நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக உள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே படத்தில் நடிப்பதற்கு சரியான கதை அமைய வேண்டும். நமக்கு எந்த நடிகர்கள் எல்லாம் தேதி கொடுப்பார்கள் என்பதைப் பார்த்து அதற்கேற்றபடி கதை எழுதினால் சரியாக இருக்காது. நீங்கள் குறிப்பிட்ட அனைத்து நடிகர்கள் மீதும் எனக்குப் பெரிய மரியாதை உள்ளது. நான் ஒரு கதையை எழுதிவிட்டு அதிலுள்ள கதாபாத்திரங்களுக்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ அவர்களைத்தான் அணுகுவேன். இதுதான் என்னுடைய சினிமா உருவாக்க அணுகுமுறை" எனப் பதிலளித்தார்..