தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலமடைந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பின்பு இயக்குநராக அவதாரம் எடுத்த லாரன்ஸ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் 'ருத்ரன்', 'அதிகாரம்' மற்றும் 'சந்திரமுகி 2' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே 'லாரன்ஸ் அறக்கட்டளை' என்ற நிறுவனத்தையும் நடத்தி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவி திட்டங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், ராகவா லாரன்ஸிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி. எனது சார்பாக என் அம்மா இந்த விருதினை பெற்றது சிறப்பு" என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே டாக்டர் பட்டம் பெற்ற ராகவா லாரன்ஸிற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.