Radhika takes web series about true incident

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அதிலும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் தொடர்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்தவகையில் இந்தியாவை உலுக்கிய சம்பவம் ஒன்றை வெப் சீரிஸாக ராதிகா எடுக்கவுள்ளார்.

வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மறைந்த நடிகர் எம்.ஆர் ராதா. அப்போது முன்னணி நடிகராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் எம்.ஆர் ராதா அவர்களுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் வைத்து துப்பாக்கியால் எம்.ஆர் ராதா சுட்டார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. பின்பு எம்.ஆர் ராதா அவர்கள் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

இந்நிலையில் எம்.ஆர் ராதாவின் மகளான ராதிகா இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை எடுக்கப்போவதாகத்தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், " என் தந்தை எம்.ஆர்.ராதா சர்ச்சைக்குரிய மனிதர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நாட்களில் எம்.ஜி.ஆர்-க்கும், எனது தந்தைக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைவருக்கும் தெரியும். அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருக்கிறேன். இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.