Skip to main content

“பாஜக... வெறும் தேங்காய் மூடி கச்சேரிதான்”- ராதாரவி கலகல பேச்சு

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, ஹரி உத்ரா இயக்கத்தில், சிவநிஷாந்த், ஆன்டனி, அய்ரா, திவ்யா உள்ளிட்டோர் நடிக்கும் படம், கல்தா.  கேரள மாநிலத்தில் இருந்து, மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து, தமிழக எல்லைக்குள் கொட்டுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இந்த படத்தின் கதை கருவும் இதுதான். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார்.
 

radharavi

 

 

அப்போது அவர் பேசுகையில், “மக்கள்,  தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் எதற்காக அரசியல்வாதிகள் வோட்டு போட இரண்டாயிரம் ரூபாய் தருகிறார்கள் என்றும், எதற்காக இலவசம் தருகிறார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டும். உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, ஏன் வோட்டுக்கு காசு தருகிறாய் என்று மக்கள் யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் எல்லாம் யோசித்தீர்கள் என்றால் படத்தில் வருவதுபோன்று குப்பைகளை கொட்டாமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்காகதான் மக்கள் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்குகிறார்கள் என்று சொன்னேன். 

சும்மா அரசியல்வாதி, அரசியல்வாதி என்று காரணம் சொல்கின்றனர். பாவம், அரசியல்வாதிகள் படுகின்ற கஷ்டம் நமக்குதான் தெரியும். அரசியல்வாதிகள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள் என்று நாம் சொல்கிறோம். இதோ கட்சி மாறினார் ராதாரவி பாஜகவில் நல்லா சம்பாதிக்கிறார் என்று பல விஷயங்கள் சொல்கிறார்கள்.
 

day night


போயும்  போயும் பாஜக பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? நான் மேடையிலேயே சொல்கிறேன், ஏன் அவர்களிடமே சொல்லியிருக்கிறேன். பணம் தரும் கட்சியா அது? வெறும் தேங்காய் மூடி கச்சேரிதான். அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். அதனால் அனைத்து அரசியல்வாதிகளும் பணம் வாங்கிக்கொண்டு சந்தோசமாக இல்லை, சிரமப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒருசிலர் இருக்கிறார்கள் பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸா இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போக வேண்டும்” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.