Skip to main content

''தனிமைபடுத்துவதில் ஒன்றும் தவறில்லையே..!'' - ராதாரவி விளக்கம் 

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
gds

 

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், குறிப்பாக சென்னையில் பாதிப்பு பல மடங்காக உயர்ந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கினால் சிக்கிக் கொண்டவர்கள் இ-பாஸ் விண்ணப்பித்து சொந்த ஊருக்கு திரும்பலாம் என்று தமிழக அரசு ஏற்பாடு செய்தது.


இதையடுத்து சில பிரபலங்களும் சென்னையை விட்டு, தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அண்மையில் இயக்குனர் பாரதிராஜா தேனிக்கு சென்று, பின்னர் தன்னை தானே தனிமைபடுத்திக்கொண்ட விஷயம் சர்சையானது. அதன்பின் அவர் அதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார். அதேபோல் நடிகர் ராதாரவிக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் தனிமைபடுத்தப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனையடுத்து, ஓய்வெடுப்பதற்காக, கோத்தகிரிக்கு சென்று தனிமையில் ஓய்வெடுத்து வருவதாக சமீபத்தில் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார் ராதாரவி. இந்நிலையில் தொடர்ச்சியாக திரையுலகினர் பலரும் நலம் விசாரித்துக் கொண்டே இருந்ததால் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ராதாரவி. அதில்...

 

 


"என்னை பற்றி தவறான செய்தி ஒன்று வெளியானதால் பலரும் தொலைபேசியிலும், மெசேஜிலும் நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். தனிமைப்படுத்தப்பட்டார் என்கிறார்கள். இந்த நேரத்தில் அனைவரையுமே தனிமைப்படுத்திதான் ஆக வேண்டும். வேறு மாவட்டத்திலிருந்து, இந்த மாவட்டத்துக்கு வந்தால் தனிமைப்படுத்துவார்கள். அதில் ஒன்றுமே தவறில்லை. கார் பாஸ் கொடுக்கும் போதே, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே வரமுடியும். இங்கு வீடு இருப்பதால் இங்கு வந்து தங்கியிருக்கிறேன். 14 நாட்கள் வீட்டிற்குள்தான் இருப்பேன். மாநகராட்சியிலிருந்து நோட்டீஸ் ஒட்டுவார்கள். ஒட்டட்டும் அதில் தவறில்லை. கோத்தகிரியில் உள்ள அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இங்கு எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதால் பெரிய செய்தியாகிவிட்டது. அரசாங்கம் எப்போது படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்கிறதோ, அப்போது சென்னைக்கு மீண்டும் வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் பேசும்போது நீ குறுக்கப் பேசாத” - மேடையில் கோபப்பட்ட ராதாரவி!

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

 "You don't interrupt when I'm talking" - Radharavi angry on stage

 

இளையராஜா இசையில் டி.கிருஷ்ணன் தயாரித்திருக்கும் படம் ஸ்ரீஇராமானுஜர். ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்த ஸ்ரீஇராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் டி.கிருஷ்ணனே இராமானுஜராக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி கூறுகையில், “இங்கு ஆத்திகம், நாத்திகம் என்று வெவ்வேறு கருத்துகள் பேசப்படுகிறது. அப்படியெல்லாம் பேசக்கூடாது. ஏனென்றால் ஆத்திகம் இல்லாமல் நாத்திகம் கிடையாது. நாத்திகம் இல்லாமல் ஆத்திகம் கிடையாது. அந்த காலத்திலேயே சீர்திருத்தக் கருத்துகளைப் பேசி எல்லோரையும் சமமாக நினைத்தவர்தான் இராமானுஜர். 

 

சீர்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. ஒருமுறை எனது தயாரிப்பில் கமல்ஹாசனை நடிக்க வைப்பதற்காக அவரது கால்ஷீட் கேட்டு அவரை சந்திக்கச் சென்றேன். நானும் கமலும் அப்போது நல்ல நண்பர்கள். "உன்னை வச்சு ஒரு படம் எடுக்கணும்" என்று அவரிடம் கேட்டபோது, “இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம்" என்றவர், "நான் குளத்தில் போட்ட ஆமை மாதிரி வாயை திறந்துகொண்டே இருக்கணும். எப்போ குருவி விழுதோ அப்போ வாயை டக்குன்னு மூடிக் கொள்ளனும்" என்றார். கமல் ஏன் அப்படி சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் பெரிய அறிவாளி. இன்றைக்கு சினிமாவில் நடிகர் திலகம் இல்லையென்றாலும் கமல்ஹாசன் இருக்கிறார் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். 

 

நான் சொல்லித்தான் இதில் அவர் நடித்தார் என ஒய்.ஜி சொன்னார். அப்படியெல்லாம் யாரையும் திரி போல தூண்டிவிட முடியாது என்று ராதாரவி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் உட்கார்ந்திருந்த ஒய்.ஜி.மகேந்திரன் குறுக்கிட்டார். அதற்கு நான் பேசும் போது நீ குறுக்கப் பேசாத என்றார் ராதாரவி. பேசுவதை ஒழுங்கா பேசு என்றார் ஒய்.ஜி.மகேந்திரன். இது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. 

 


 

Next Story

விஜயகாந்திற்காக கடவுளின் மீது கோபம்; ரஜினிக்கு அப்புறம் விஜய் தான் - ராதாரவி பளிச் பதில்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Radharavi interview about tamil cinema heroes

 

சினிமா வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ராதாரவி

 

என் தந்தை எம்.ஆர்.ராதா எப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உள்வாங்கி அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார் என்று அடிக்கடி வியந்திருக்கிறேன். பிறவிக் கலைஞன் அவர். நாடகம் மூலமாக நடிகராக அவர் மாறினாலும் எலக்ட்ரிக் வேலைகள் உட்பட பல விஷயங்கள் அவருக்குத் தெரியும். பெரியாரை சந்திப்பதற்கு முன்பே புரட்சிகரமான சிந்தனைகள் அவருக்குள் தோன்றின. இப்போது நடக்கும் விஷயங்களை அப்போதே அவர் சொல்லியிருக்கிறார். படிப்பறிவும் இல்லாமல் எப்படி இவை அனைத்தையும் சாதித்தார் என்பது எனக்கு இன்றும் ஆச்சரியம்.

 

'பிசாசு' படத்தில் நான் செய்த கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த கிரியேட்டிவிட்டி தான் நான் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. விஜயகாந்த் சார் மாதிரி ஒரு நல்ல மனிதரைப் பார்க்க முடியாது. எப்போதும் தர்மம் செய்துகொண்டே இருப்பார். கடவுள் பக்தி அதிகமுள்ள எனக்குக் கடவுள் மேல் கோபம் வருவதற்கு விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலையும் ஒரு காரணம். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்கவே மாட்டார். அவருடைய மனைவி அவரை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்.

 

கமல் சாருடன் ஏன் நான் அதிகம் நடிக்கவில்லை என்பது தெரியவில்லை. அவரிடம் தான் கேட்க வேண்டும். அதேபோல் அஜீத்துடன் சில படங்கள்தான் நடித்திருக்கிறேன். அதன் பிறகு ஏன் அவர் என்னைக் கூப்பிடவில்லை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். 5000-க்கும் அதிகமான ஆபரேஷன்களுக்கு அஜீத் சார் நிதியுதவி செய்திருக்கிறார். அவர் மீதான மரியாதை எனக்கு அதிகரித்ததற்கு அதுதான் காரணம். 

 

ஆரம்பத்தில் நான் பார்த்த விஜய்க்கும் சர்க்கார் படத்தில் நான் பார்த்த விஜய்க்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. 'நாளைய தீர்ப்பு' படத்தின்போது அவர் அவ்வளவு பயப்படுவார். பலமுறை நான் அவரைத் தேற்றியிருக்கிறேன். அதன் பிறகு அவர் அடைந்த வளர்ச்சி பெரிய அளவில் இருக்கிறது. "எம்ஜிஆரை சுட்ட நிகழ்வு நிகழ்ந்த அன்று மாலை உங்கள் வீட்டின் நிலை எப்படி இருந்தது?" என்று ஒருமுறை என்னிடம் தனியாகக் கேட்டார். நான் பிரமித்துப் போனேன். அவருடைய உழைப்பால் தான் ரஜினி சாருக்கு அடுத்தது விஜய் தான் என்கிற நிலையில் இன்று இருக்கிறார்.