pushpa 2 team supports a women died in a movie special screening

புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ இன்று(05.12.2024) பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கவனித்துள்ளார்.

இப்படம் முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் படத்தை வரவேற்க ஆவலுடன் இருந்தனர். அதன்படி ஹைதராபாத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று இரவு திரையிடப்பட்டது. அங்கு அல்லு அர்ஜூன் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் அல்லு அர்ஜூன் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தும் திரையரங்கு முன் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

அந்த திரையரங்கில் அல்லு அர்ஜூன் காரில் வருகை தந்ததால், அவரை நோக்கி கூட்டம் சென்றது. அப்போது கூட்ட நெரிசலில் ரேவதி(39) என்ற பெண்மனி சிக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரது மகனும் அங்கு சென்றிருந்த நிலையில் அவரும் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினார். மேலும் படுகாயமடைந்து மயங்கி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், “நேற்று இரவு திரையிடலின் போது நடந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அந்த குடும்பம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறு குழந்தையுடன் இருக்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம்” என அவர்களது எக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்குடும்பத்தின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.