நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வசித்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு இன்றி தவித்துவந்தன.
இது வெயில் மற்றும் கரோனா ஊரடங்கு காலம் என்பதாலும், சுற்றிலும் காடுபோல் இருப்பதாலும், ஆள் நடமாட்டம் முற்றிலும் இல்லாததாலும் குரங்குகளுக்குப் பருக தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்குகளின் பசி, தாகத்தைத் தணிக்க புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர், அந்தக் கோவில் அருகே தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்துள்ளனர். மேலும், அந்தத் தண்ணீர் தொட்டி அருகே பழங்கள், உணவுகளை வைப்பதற்கு ஒரு மேடையும் அமைத்து, அதன்மூலம் குரங்குகளுக்குத் தினந்தோறும் தண்ணீர், உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிவருகின்றனர்.