சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸால் 2.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 206 பேரைப் பாதித்துள்ளது. மேலும், கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையில் தலா ஒருவர் என மூன்று பேர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு குணமாகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று உத்திரப் பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் பாலிவுட்டின் பிரபல பாடகி ஒருவருக்கும் கரோனா இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்த பாடகி யார் என்பது குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.