தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஃபெப்சி அமைப்புக்கு பதிலாக புதிய தொழிலாளர்கள் கூட்டமைப்பை உருவாக்க கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்தனர். இதற்கு ஃபெப்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் கடந்த மாதம் நடத்தியது.
இதனிடையே இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் தங்களது சங்க உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் என சங்க உறுப்பினர்களுக்கு ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமாத் தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஃபெப்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு சங்கங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2025 மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டதால், அவர்களுடன் பணியாற்றுமாறு தங்களை கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரச்சனையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி இரு தரப்பும் யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்து முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.