கரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா துறை வேலைகள் சென்ற வாரம் பல்வேறு நிபந்தனைகளுடன் தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு. இதைத்தொடர்ந்து திரைப்படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளான படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணியினர் படப்பிடிப்புகளை மீண்டும் துவங்குவதற்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்...
கடந்தவாரம் தாங்கள் படப்பிடிப்பிற்குப் பிந்தைய வேலைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். அதற்காக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது பல கோடி ரூபாய் புழங்கும் தமிழ் திரையுலகில் அத்தனை கோடி ரூபாயும் முடங்கிப் போயுள்ளது. தொழிலாளர்கள் தோழர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிலைமையைத் தாயுள்ளத்தோடு பரிசீலித்து கரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாலிவுட் திரையுலகில் பாதுகாப்பு உடைகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெறுவது போல இங்கும் தாங்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களும், திரைப்படத் தொழிலாளர்களும் படப்பிடிப்புகளை மீண்டும் துவக்கி நடத்துவதற்கு ஆணை பிறப்பித்து திரையுலகினரின் வாழ்வாதாரத்தை மீட்டு தருமாறு தங்களை இருகரம் குவித்து பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம். எனக் குறிப்பிட்டுள்ளனர்.