நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலரும் நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக்கின் மறைவிற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
"1987ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படம் மூலம் விவேக் அவர்கள் நடிகராக அறிமுகமானார். 34 வருடங்களாக மக்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் இன்று காலமானார். ஐந்துமுறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது மற்றும் கலைமாமணி, சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் உட்பட பல பட்டங்கள் பெற்ற ஒப்பற்ற கலைஞன் என போற்றப்பட்டவர் விவேக். தயாரிப்பாளர்களின் மனதில் மட்டுமல்ல ரசிகர்களின் மனதிலும், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் இதயத்திலும் இடம்பிடித்து பவனி வந்த விவேக் அவர்களின் மறைவு சமுதாயத்திற்கு மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். விவேக் அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.