
தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்பு அமெரிக்காவை சேர்ந்த பாடகர் மற்றும் நடிகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அதனால் தொடர்ந்து ஹாலிவுட்டிலே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இதனிடையே ஹாலிவுட்டில் ‘ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இலியா நைஷுல்லர் என்பவர் இயக்க பீட்டர் சஃப்ரான் மற்றும் ஜான் ரிக்கார்ட் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் ஜான் சீனா, இட்ரிஸ் எல்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டீவன் பிரைஸ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜூலை 2ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது படத்தில் தனக்கு ஏற்பட்ட சிறிய விபத்து குறித்தும் பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்திருந்ததாவது, “மழையில் சண்டை போடும் காட்சியை படமாக்கிக் கொண்டு இருந்தோம். சீன் படி நான் தரையில் உருண்டு விழ வேண்டும். அப்போது கேமரா என் அருகில் வர வேண்டும். இது தான் ஷாட். நான் தரையில் உருண்டு விழுந்ததும் கேமரா என் அருகில் வந்தது. ஆனால் கேமராவில் பொருத்தப்பட்டிருந்த மேட் பாக்ஸ் என் புருவத்தில் பட்டது. அதில் என் புருவத்தில் உள்ள ஒரு பகுதி காணாமல் போய்விட்டது. புருவத்தில் பட்டு காயமானது. அதிர்ஷ்டவசமாக கண்ணில் படவில்லை. பின்பு காயத்திற்கு மருந்து போட்டுவிட்டு உடனே படப்பிடிப்பிற்கு போய்விட்டேன். அந்த நாளில் என்னுடைய காட்சிகள் அனைத்திலும் நடித்து முடித்தேன். ஏனென்றால் மீண்டும் வந்து மழையில் படமாக்குவதை நான் விரும்பவில்லை” என்றார்.