Skip to main content

"ஆரம்பத்தில் எதிர்வினையாற்ற விரும்பவில்லை" - வடிவேலு வசனத்துடன் பிரியா பவானி ஷங்கர் விளக்கம்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

priya bhavani shankar clarified about his recent news

 

சின்னத்திரையிலிருந்து 'மேயாத மான்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியின் 'அகிலன்', சிம்புவின் 'பத்து தல', ராகவா லாரன்ஸின், 'ருத்ரன்', கமலின் 'இந்தியன் 2' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். 

 

சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பிரியா பவானி ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியுள்ளதாக சில செய்திகள் வெளியானது. அதில், "எதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் மிகவும் பிடிக்கும். படங்களில் நடித்தால் பணம் வருகிறது. அதனால் நடிக்கிறேன். சினிமா பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்களே திரையுலகில் தங்களை நிரூபித்துக்கொள்ள நிறைய கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் நான் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என பிரியா பேசியுள்ளதாக சொல்லப்பட்டது. 

 

இந்த செய்தி  சமூக வலைதளத்தில் வைரலாக பரவ,  இது குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மாப்ள சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவாராம் அப்படிங்கிற மாதிரி இருக்கிறது. ஆரம்பத்தில் நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. மரியாதைக்குரிய சில நிறுவனங்கள் கூட நம்பகத் தன்மையைப் பற்றி கவலைப்படாமல் காரசாரமாக செய்தியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இது போல் செய்கின்றன. 

 

முதலில் நான் பேசியதாக அவர்கள் குறிப்பிட்டது துளியளவும் உண்மையில்லை. அதை நான் சொல்லவே இல்லை. அப்படியே அதை சொல்லியிருந்தாலும் அதில் என்ன பெரிய விஷயம் என்று புரியவில்லை. ஆம் நான் பணத்திற்காக வேலை செய்கிறேன். எல்லோரும் பணத்திற்காகத் தான் வேலை செய்கிறார்கள். ஒரு நடிகரிடம் இருந்து வரும்போது மட்டும் ஏன் இவ்வளவு மலிவாக மற்றும் இழிவாக பார்க்கப்படுகிறது. நான் என் வழியில் முன்னேறிவிட்டேன், யாரையும் எளிதாகவும் மலிவாகவும் நினைக்கமாட்டேன்" எனக் கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊடகங்களை முடக்குவது மக்களுக்கு உதவாது” - குரல் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

priya bhavani shankar about manipur issue

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

 

அதனை எதிர்த்துப் பழங்குடியினப் பட்டியலில் இருக்கும் சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்ட போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதனிடையே கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொலை, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

 

இந்த மணிப்பூர் சம்பவத்திற்கு திரைப் பிரபலங்கள் வைரமுத்து, அக்‌ஷய் குமார், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர், "மணிப்பூர் பெண்கள் சம்பவம் சமூகம், மனித நேயம் என அனைத்தும் பல்வேறு நிலைகளில் தோல்வியடைந்துவிட்டன. இந்தச் செயலை மனிதர்களாகிய நாம் நேர்மையுடன் கண்டிக்க வேண்டும். இதுபோன்ற பல கொடூரங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஊடகங்களை முடக்குவது பிரச்சனையில் உள்ள மக்களுக்கு உதவாது" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.  

 

 


 

Next Story

உணர்ச்சி ததும்பலா? - ‘பொம்மை’ விமர்சனம்!

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Bommai Movie Review

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் எஸ்.ஜே. சூர்யா தயாரித்து நடித்துள்ள படம். அதுவும் பல்வேறு வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநர் ராதாமோகன் கூட்டணியில் உருவாகி ரிலீஸ் ஆகி இருக்கும் பொம்மை திரைப்படம் எந்த அளவு வரவேற்பைப் பெற்று இருக்கிறது?

 

நாயகன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஒரு நோய் இருக்கிறது. என்ன நோய் என்றெல்லாம் கேட்கக்கூடாது! சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்த எஸ்.ஜே. சூர்யா மிகவும் சோகத்தில் இருக்கிறார். அவருக்கு ஆறுதலாய் எதிர் வீட்டுப் பெண் நந்தினி அவருடன் நட்பாக பழகுகிறார். இது காலப்போக்கில் ஒரு நல்ல சொந்தமாக அவர்களுக்குள் மாறும் தருவாயில் நந்தினி திடீரென காணாமல் போகிறார். இதையடுத்து மீண்டும் எஸ்.ஜே. சூர்யா மிகுந்த சோகத்துக்குள் உள்ளாகி மன நோயால் பாதிக்கப்படுகிறார். இதன் காரணமாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் ஒரு பொம்மையுடன் பேசிப் பழக ஆரம்பிக்கிறார். இதையடுத்து நடக்கும் விபரீதங்கள் என்ன? என்பதே பொம்மை படத்தின் மீதி கதை.

 

எஸ்.ஜே. சூர்யா ஒரு நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த கதையே. இருந்தும் அவர் இன்னும் யாருக்குத் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்க இம்மாதிரியான படங்களைத் தேர்வு செய்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஒரு கதையாக பார்க்கும் பொழுது பெரிதாக ஒன்றும் இல்லாத இப்படத்தில் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. சின்ன சின்ன காட்சிகளில் கூட வழக்கம் போல் மிக அபாரமாக பர்ஃபாமன்ஸ் செய்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவருக்கு நிகராக நாயகி பிரியா பவானி சங்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா - பிரியா பவானி சங்கர் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் ஜஸ்ட் லைக் தட் போல் மிக எதார்த்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த கெமிஸ்ட்ரி படம் முழுவதும் இருந்திருந்தால் இப்படம் நன்றாகப் பேசப்பட்டிருக்கும்.

 

எஸ்.ஜே. சூர்யா நண்பராக நடித்திருக்கும் டவுட்டு செந்தில் கடமைக்கு வந்து சென்று இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவின் முதலாளியாக நடித்திருக்கும் நடிகர் ஜானகிராமன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். மலையாளம் கலந்து தமிழ் பேசும் இவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி அவரது வேலையை செவ்வனே செய்துவிட்டு சென்றிருக்கிறார். இவர்களுடன் நடித்த இன்ன பிற இதர நடிகர்களும் அவரவர் வேலையை செய்திருக்கின்றனர்.

 

அபியும் நானும், மொழி, உப்பு கருவாடு, பயணம், காற்றின் மொழி போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் இப்படத்தை ஏனோ கொஞ்சம் அயர்ச்சியுடன் கொடுத்து இருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் பெரிதாக எதுவும் இல்லாத இப்படத்தை தன் திரைக்கதை மூலம் ஒப்பேற்ற முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியும் கை கொடுத்ததா என்றால் சற்று சந்தேகமே! ஒரு வலு இல்லாத கதையில் நடிப்பு என்ற ஒரு விஷயத்தை ஆழமாக வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் டிராவல் செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் டிராவல் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கூட கவனமாக இருந்திருந்தால் இப்படம் பேசப்பட்டு இருக்கும். படத்தில் நடித்த நாயகன், நாயகி இருவரும் மிகச் சிறப்பாக நடித்து படத்தை இருவரும் தூண் போல் நின்று காத்திருக்கின்றனர். அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருந்தாலும் படத்தின் திரைக்கதையும் மற்ற நடிகர்களின் பங்களிப்பும் கதைக்கு சற்று பாதகமாக அமைந்திருப்பது மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. நாயகனும் இயக்குநரும் கதைத் தேர்வில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம்.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் எஸ்.ஜே. சூர்யா பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. கதை மற்றும் திரைக்கதை காட்டிலும் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் கெமிஸ்ட்ரி மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பை மட்டும் ரசிப்பவர்களுக்கு பொம்மை ரசிக்க வைக்கும்.

 

பொம்மை - உணர்ச்சி குறைவு!