Skip to main content

“அது உங்களுடைய உச்சம் அல்ல...”- மறைந்த சச்சி குறித்து ப்ரித்விராஜ்!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
prithviraj

 

மலையாள சினிமாவின் பிரபல கதையாசிரியரும் இயக்குனருமான சச்சி உடல்நல குறைவால் 18ஆம் தேதி இரவு காலமானார். அவருடைய மறைவிற்கு மலையாள சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சச்சியின் நெருங்கிய நண்பரான ப்ரித்விராஜ் சச்சியின் மறைவு குறித்து நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

அதில், "சச்சி.. நிறைய மெசேஜ்கள் வந்திருந்தன. சில விசித்திர அழைப்புகளும் வந்தன. நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்கின்றனர். எனக்கு ஆறுதல் கூறுகின்றனர். என்னையும் உங்களையும் தெரிந்த அனைவருக்கும் நம்மையும் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் என்னிடம் கூறிய ஒரு விஷயத்தை நான் அமைதியாக மறுக்கிறேன். அது நீங்கள் 'உச்சத்துக்குச் சென்று விட்டீர்கள்' என்ற வார்த்தை.

 

உங்களுடைய கனவுகளையும், யோசனைகளையும் தெரிந்தவர்களில் ஒருவனாக 'அய்யப்பனும் கோஷியும்' உங்கள் உச்சம் அல்ல என்பதை நான் அறிவேன். இதுதான் நீங்கள் விரும்பிய ஒரு ஆரம்பம். நீங்கள் விஸ்வரூபம் எடுக்கும் இந்தக் கட்டத்தை அடைய உங்கள் ஒட்டுமொத்த படங்களும் ஒரு பயணமாக அமைந்தது. எனக்குத் தெரியும். சொல்லப்படாத கதைகள் ஏராளம் உண்டு. பல நிறைவேறாத கனவுகள் உண்டு. பல இரவு நேர வாட்ஸப் வாய்ஸ் மெசேஜ் கதை சொல்லலும் உண்டு. ஏராளமான தொலைபேசி அழைப்புகளும் உண்டு. வரப்போகும் வருடங்களுக்கான இந்த மிகப்பெரிய திட்டத்தை நீங்களும் நானும் உருவாக்கினோம். திடீரென நீங்கள் சென்றுவிட்டீர்கள்.

 

சினிமா குறித்த உங்கள் பார்வையையும், வரப்போகும் ஆண்டுகளுக்குத் தேவையான உங்கள் படங்களின் திட்டங்களை வேறு யாரிடமும் சொல்லியிருக்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னிடம் கூறினீர்கள். ஆனால் நீங்கள் இருந்திருந்தால் அடுத்த 25 ஆண்டு மலையாள சினிமாவும் என்னுடைய எஞ்சியிருக்கும் சினிமா வாழ்க்கையும் வேறு மாதிரி அமையும் என்பதை நான் அறிவேன்.

 

ஆனால் சினிமாவை விட்டுவிடுவோம். நீங்கள் என்னோடு இருக்க அந்தக் கனவுகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன். அந்த வாய்ஸ் மெசேஜ்கள் மீண்டும் கிடைப்பதற்காக. அடுத்த தொலைபேசி அழைப்புக்காக. நாம் இருவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று என்னிடம் சொல்வீர்கள். ஆம் நாம் ஒரே மாதிரியானவர்கள்தான். ஆனால் என்னை விட நீங்கள் மிகவும் வித்தியாசமாக உணர்பவர் என்று நான் இப்போது நம்புகிறேன்.

 

உங்களைத் தெரிந்திருப்பது ஒரு கவுரவம் சச்சி. என்னுடைய ஒரு பகுதி உங்களுடனே சென்றுவிட்டது. இப்போதிலிருந்து உங்களை நினைவில் கொள்வது என்னுடைய அந்தப் பகுதியையும் நினைவில் கொள்வது போலாகும். நன்றாக ஓய்வெடுங்கள் சகோதரா. நன்றாக ஓய்வெடுங்கள் ஜீனியஸ். உங்களை உலகின் மறுபக்கத்தில் சந்திக்கிறேன். சாண்டல்வுட் கதையின் க்ளைமேக்ஸை இன்னும் நீங்கள் என்னிடம் சொல்லவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குறுகிய நாட்களில் சாதனை படைத்த ஆடுஜீவிதம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
prithviraj blessy aadujeevitham box office collection

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த  நாவல் ‘ஆடு ஜீவிதம்’. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி நிறைந்த வாழ்க்கை மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து கேரளா திரும்பினார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இந்த நாவலை தழுவி ‘ஆடு ஜீவிதம்’ என்ற அதே தலைப்பில் மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலரை வைத்து படம் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அதை தொடர்ந்து படம் வெளியான பிறகு மாதவன், யோகி பாபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

prithviraj blessy aadujeevitham box office collection

இந்த நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது. இதுவரை மலையாளத்தில் பிரேமலு -ரூ.135 கோடி, லூசிஃபர் - ரூ.127 கோடி, புலிமுருகன் - ரூ.152 கோடி, 2018 - ரூ.175 கோடி, மஞ்சும்மல் பாய்ஸ் - ரூ.222 கோடி ஆகிய படங்கள் அதிகம் வசூலித்த படங்களாக டாப் 5 இடத்தில் இருக்கிறது. இதில் ஆடுஜீவிதம் போலவே பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஆடுஜீவிதம் படத்தை தவிர்த்து அனைத்து படங்களும் மலையாளத்தில் மட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story

“மஞ்சும்மெல் பாய்ஸ் போல அல்ல... சல்யூட் சார்” - யோகி பாபு புகழாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
yogi babu appreciate prithviraj aadujeevitham

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, யோகி பாபு இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

yogi babu appreciate prithviraj aadujeevitham

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “இன்னும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. அந்த வலி நிறைந்த பயணம். இப்படம் சினிமா பிரியர்களுக்கு விருந்து. இது மஞ்சும்மெல் பாய்ஸ் போல சீட் நுணியில் பார்க்கும் சர்வைவல் த்ரில்லர் அல்ல. இது ஒரு எமோஷனல் சர்வைவல் டிராமா. அதனால் அதற்கு தகுந்த வேகத்தில் நகரும். பிரித்விராஜ் சார் இந்த படத்தின் உயிர். மம்மூட்டி, மோகன்லால் நடிகர்களுக்கு பிறகு பிரித்விராஜுடைய நடிப்பு இன்னும் பல வருடங்கள் மறக்க முடியாததாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் சல்யூட் சார்” என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே மாதவன், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அவர்களுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.