
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். காதலை மையமாக வைத்து ஒரு நாள் இரவு நடக்கும் சம்பவங்களை யதார்த்தமாக காட்டியிருந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக தகவல் வெளியானது. பின்பு இயக்குநர் பிரேம் குமார் ஒரு பேட்டியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதை உறுதி செய்தார். இதையடுத்து 96 பட இரண்டாம் பாகம் குறித்து எந்த தகவலும் வராமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் மீண்டும் விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரேம் குமார், 96 பட இரண்டாம் பாகத்திற்காக பிரதீப் ரங்கநாதனிடம் பேசியதாகவும் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இத்தகவலை தற்போது பிரேம் குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. '96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் 96-2 எடுக்க முடியும். பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் 96-2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்” என்றார்.