
பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆமிர் கான் தயாரித்துள்ள ‘லாகூர் 1947’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ஜூனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவை தவிர்த்து ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராகவும் ப்ரீத்தி ஜிந்தா இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ப்ரீத்தி ஜிந்தா, மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்காக மறைந்த ராணுவ மனைவிகள் நல சங்கத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை கொடுத்துள்ளார். இதனை நேற்று நடந்த ஒரு நிகழ்வு ஒன்றில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சிலர் நம் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர், மற்றவர்கள் போர்க்களத்தில் ஏற்பட்ட காயங்களுடன் திரும்பினர். அவர்கள் நமது ஆயுதப் படைகளின் ஒரு பகுதியினர், அவர்கள் நமது நாளைக்காக அவர்களது இன்றைய தினத்தை தியாகம் செய்கின்றனர். இவர்களைப் போன்ற ஹீரோக்கள் நமது எல்லைகளைக் காக்கும் வரை, நமது நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. இராணுவ மகளிர் நலச் சங்கத்திற்கான (AWWA) நிகழ்வு ஒன்றில் ஆண்களை இழந்த குடும்பத்தினர் பெருமையுடன் புன்னகையுடனும் கலந்து கொண்டனர். அவர்களின் உணர்வு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அவர்களுக்காக எனது பங்களிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்தியா அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. இப்போது இரு நாடுகளுக்குமிடையே அமைதி நிலவுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு ப்ரித்தி ஜிந்தா இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.