Skip to main content

பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சி; கோமியம் தெளித்து மாணவர்கள் சுத்தம்

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

prakash raj students issue

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ், நடிப்பை தாண்டி சமூக நலன் சார்ந்த பணிகள், அரசியல் என அடுத்தடுத்த தளங்களிலும் பயணித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி குறித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

 

இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பேசி வரும் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சி 'தியேட்டர் வசனம், சினிமா மற்றும் சமூகம்' என்ற தலைப்பில் அக்கல்லூரிக்குள் உள்ள நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த சில மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தனியார் நிகழ்ச்சி ஏன் கல்லூரி வளாகத்திற்குள் நடக்கிறது என கேள்வியை முன் வைத்தனர். 

 

இந்நிகழ்ச்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்லூரி மாணவர்களைத் தவிர்த்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறினர். போராட்டக்காரர்கள் உள்ளே நுழையாமல் இருக்க கல்லூரிக்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

அக்கல்லூரியின் கண்காணிப்பாளர், போராட்டம் நடத்துபவர்களில் மாணவர்களோடு வெளியாட்களும் கலந்துள்ளதாக தெரிவித்தார். ஆனால் அவர்கள் பற்றி எந்த தகவல்களும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்ட அந்த அரங்கில் சில மாணவர்கள் கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர். இது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

 

 

சார்ந்த செய்திகள்