உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே கரோனா காரணமாக தனது பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரை சம்பளம் கொடுத்து விடுமுறை அளித்த நடிகர் பிரகாஷ் ராஜ் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு உதவி செய்து வந்தார்.
மேலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்ததுக்கொண்டார். சமீபத்தில் அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக தெலுங்கானா அரசாங்கத்திடம் உதவியும் கேட்டிருந்த அவர் தற்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் அவர்களுடைய சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலம் தொடர்பான புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தள பதிவில் பகிர்ந்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...
"நான் பிச்சையெடுத்தாலும், கடன் வாங்கினாலும், ஆனால் என்னைத் தாண்டி நடந்து செல்லும் என் சக குடிமகன்களுக்குத் தொடர்ந்து பகிர்ந்து கொடுப்பேன். அதை அவர்கள் எனக்குத் திருப்பி கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் கடைசியாகத் தங்கள் வீட்டை அடையும்போது அவர்கள், எங்கள் வீட்டை அடைய நம்பிக்கையும் வலிமையும் கொடுத்த ஒரு மனிதனை நாங்கள் சந்தித்தோம் என்று கூறுவார்கள். வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம்" எனக் கூறியுள்ளார்.