Prakash Raj Maha Kumbh Photo issue

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கியது. பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கும்பமேளாவில், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள், கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 10 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் இந்த விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதைப் பார்த்த சிலர் பிரகாஷ் ராஜை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் பிரகாஷ் ராஜ், கும்பமேளாவில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். வைரலான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விமர்சனத்துக்கு விளக்கமளித்துள்ள பிரகாஷ் ராஜ், “இது ஒரு போலி புகைப்படம். மதவெறியர்கள் மற்றும் கோழைகளின் கடைசி முயற்சி பொய் செய்திகளை பரப்புவதுதான். அதுவும் அவர்களின் புனித விழாவை பயன்படுத்தி. இது ஒரு அவமானமான செயல். இது குறித்து புகார் கொடுத்துள்ளேன். விளைவுகளை எதிர்கொள்ளுங்கள்” என விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.