அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் 10 நாட்களில் ரூ.100 கோடியை கடந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. படக்குழுவினரை ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேடையில் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில் அஷ்வத் மாரிமுத்து, இந்தப் படத்தை தவிர்த்து முதல் படத்திலே என்னை நடிக்க கூப்பிட்டார் என்று கூறியிருந்தார். இது குறித்து விரிவாக பேசிய அவர், “அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே எழுதிட்டு இருக்கும் போது, ஒரு கேரக்டர் இருக்கு பன்றீயான்னு கேட்டார். அது தான் ஆரம்பப்புள்ளி. அவர் கேட்டதற்கு, நடிச்சா ஹீரோதான்னு ஒரு குருட்டு நம்பிக்கையில் பதில் சொன்னேன். அப்போ கோமாளி படமும் வரவில்லை. ஆனால் அவர் என்னை நம்பினார். பின்பு நான் கோமாளி முடித்துவிட்டு லவ் டுடே எடுத்து முடித்து, பட ரிலீஸுக்கு முன்னாடி அவருக்கு போட்டு காண்பிச்சேன். அப்போது எனக்கு நீங்க ஒரு படம் டைரக்ட் பன்னுவீங்களான்னு கேட்டேன்.
அதே சமயம் அவர் ஓ மை கடவுளே இயக்கிய பிறகு பெரிய பட்ஜெட், பெரிய சம்பளம் இருக்கிற படங்கள் பன்னனும்னு ஆசைப்பட்டேன். அப்புறம் நானே அவரிடம் நான் என்னோட மார்க்கெட்ட உயர்த்துனதுக்கு அப்புறம் என்னை வச்சி படம் பன்னுவீங்களான்னு கேட்டேன். இது கொஞ்சம் சில வருஷத்துல நடக்கும்னு நினைச்சேன். ஆனால் அது ஒரே படத்துல நடந்துடுச்சு. அதுக்கு ஆடியன்ஸ் தான் காரணம். லவ் டுடே வெற்றி என் மார்க்கெட்டை உயர்த்துச்சு. அப்புறம் அவரே கால் பண்ணி படம் பண்ணலாமான்னு கேட்டார். இதன் மூலம் சொன்ன வார்த்தையை அஷ்வத் காப்பாற்றினார். இது மட்டுமல்ல. நல்ல படம் பன்றன்னு சொன்னார். அதுவும் நடந்துச்சு. அடுத்து நூறு நாள் படம் ஓடும்னு சொன்னார். அதுவும் நடந்துச்சு. அதனால் சொன்ன வார்த்தைகளை காப்பாத்துனத்துக்கு அவருக்கு ரொம்ப தைங்க்ஸ்” என்றார்.