தமிழ் சினிமாவில் 'மைனா', 'கும்கி', 'கயல்' உள்ளிட்ட நல்ல படங்களை கொடுத்தவர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் கடைசியாக 'காடன்' படம் வெளியானது. இப்படத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 'ஈரோஸ் இன்டர்நேஷனல்' தயாரித்திருந்த இப்பத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசையமைத்திருந்தார். தமிழ் , இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 'செம்பி' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஷ்வின் குமார், கோவை சரளா நடிக்கின்றனர். 'டிரைடென்ட் ஆர்ட்ஸ்' மற்றும் 'ஏஆர் எண்டர்டெயின்மெண்ட்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவுள்ளது.