Skip to main content

விஷாலுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபு!

Published on 27/09/2021 | Edited on 27/09/2021

 

prabhu

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக ‘விஷால் 32’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது சென்னையில் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நடிகர் பிரபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக, ‘தாமிரபரணி’, ‘ஆம்பள’ ஆகிய படங்களில் விஷாலுடன் இணைந்து பிரபு நடித்திருந்த நிலையில், இப்படம் விஷாலுடன் அவர் இணையும் மூன்றாவது திரைப்படமாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஷால் வழக்கில் ஆய்வறிக்கை தாக்கல் 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் பாடம் வெளியிடும் பணிஅக்ளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷால் வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.2. 60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த, அந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் விஷாலின் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே பல கட்டங்களாக நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கு தொடர்பாக விஷால் - லைகா இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவருக்குமான 
பண பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கையை ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டும் என கோரி, விசாரணையை தள்ளிவைக்க விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது. பின்பு வழக்கு விசாரனை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.   

Next Story

“எல்லா கிராமங்களுக்கும் சென்று பாருங்க” - விஷால் ஆதங்கம் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his political entry in 2026 election

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த விஷால், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது 2026 தேர்தலில் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “வருகிற 26 உலகெங்கும் உள்ள திரையரங்கில் காணப்படுவேன். 2026 தேர்தலில் காணப்படுவேன். ஆனால் 2026-ல் என்னை வரவிடாதீங்க. நீங்க நல்லது பண்ணிட்டா நாங்க நடிச்சிட்டு எங்க வேலையை பார்ப்போம். ஏன் எல்லாருக்கும் வழி கொடுக்கிறீங்க. நீங்க நல்லது செஞ்சிருந்தால் நாங்க ஏன் எங்க தொழில விட்டுவிட்டு உங்க தொழிலுக்கு வரப்போறோம்.     
  
எல்லா கிராமங்களுக்கும் சென்று பாருங்க. அதை பார்த்தாலே இத்தனை பேர் இருக்கும் போது, எதுக்கு இன்னொரு கட்சி, இன்னொரு தலைவன் வரவேண்டும் என யோசிக்க வைக்கும். இதை ஒரு வாக்காளராக, சமூக சேவகரா ஆதங்கத்தோடு சொல்கிறேன். தி.மு.க, அ.தி.மு.க என குறிப்பிட்டு இதை சொல்லவில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரே விஷயம் மக்களுடைய அடிப்படை வசதிகள். கார், வீடு, வெளிநாட்டு படிப்பு என மக்கள் கேட்கவில்லை. இதில் என்ன கொடுமை என்றால், மக்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனை, அவர்களுக்கு தனியார் மருத்துவமனை. வரி கட்டுவது மக்கள். அந்த வரி பணத்தில் அவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்வார்களா?. இது போல நிறைய விஷயங்கள் இருக்கு. அந்த விஷயங்களையெல்லாம் பூர்த்தி செய்தால், வெறும் வாக்களித்து விட்டு என்னுடைய வேலையை செய்து வருவேன். மாற்றம் கண்டிப்பாக தேவைப்படுகிறது” என்றார்.