Skip to main content

"இந்தப் படத்தில் நடனக்காட்சியே இல்லை" - இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பிரபுதேவா பேச்சு!

Published on 17/11/2021 | Edited on 18/11/2021

 

 Prabhu Deva

 

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள 'தேள்' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, நேற்று (16.11.2021) மாலை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் ஏ. ஹரிகுமார் இயக்க, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவாவிற்கு அம்மாவாக நடிகை ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். சி. சத்யா இசையமைத்துள்ளார்.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு நடிகர் பிரபுதேவா பேசுகையில், "இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பைவிட பலமடங்கு அற்புதமான உழைப்பைத் தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள். தனஞ்செயன் சாருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படத்தின் டப்பிங் பணி மிக சுவாரஸ்யமானதாக அமைந்தது. முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா எனது பள்ளி கெமிஸ்ட்ரி ஆசிரியரை ஞாபகப்படுத்தினார். அவர் இப்படத்திற்கு மிகச் சிறப்பான இசையைத் தந்துள்ளார். அவரும் நானும் பல படங்களில் இணைந்து பணியாற்றிவருகிறோம். ஒரு தயாரிப்பாளராக ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டுவருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டுவரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

 

ad

 

ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு நடனக் காட்சியே இல்லை. மேலும், நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல்முறையாக நடித்திருக்கிறேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என என்னை செக் செய்துகொண்டே இருப்பார் இயக்குநர். நான் அம்மாதிரி நடித்தால் உடனே அதை மாற்றுவார். ஈஸ்வரி மேடம் தமிழில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். சம்யுக்தா மிக பப்ளியான அழகான நாயகியாக மிளிர்கிறார். அவரது நடிப்பு இப்படத்தில் மிக முக்கிய அம்சமாக இருக்கும். இப்படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்