'நெஞ்சிருக்கும்வரை' படம் மூலம் தமிழில் அறிமுகமான பூனம் கவுர் பின்னர் என் வழி தனி வழி, பயணம், வெடி, 6 மெழுகுவர்த்திகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு நாடகங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்து நடிகை ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து பேசியபோது...
"சினிமாவில் இது போன்ற தொல்லைகள் நடிகைகளுக்கு இருக்கிறது. முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் என்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்து எனக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அவர் அலுவலகத்தில் வந்து என்னை சந்திக்க கூறினார். இதையடுத்து எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்றேன். அப்போது அவரின் முகம் மாறியது. என் அம்மாவுடன் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை. இதனால் அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக கூட முகம் கொடுத்து பேசவில்லை. இதுவரை அந்த தயாரிப்பாளர் கூறியபடி எனக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. சினிமாவில் நடிகைகள் பல்வேறு அவமானங்களை சந்திக்க நேருகிறது" என்றார்.