கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகையும் 'தளபதி 65' பட நடிகையுமான பூஜா ஹெக்டேவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள பூஜா ஹெக்டே, "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றி, என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுத் தனிமையில் உள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. நான் தற்போது குணமடைந்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.