Skip to main content

“எங்களால் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியும்...”- பூஜா பட் காட்டம்!

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
pooja bhatt

 

சுசாந்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு திணிப்பு குறித்த விவாதம் நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகாரம் மற்றும் பணம் மிக்கவர்களின் வாரிசுகள் வெளியிலிருந்து வரும் திறமையாளர்களின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விடுகின்றனர் என்பதே பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

 

இந்நிலையில் பிரபல இயக்குனரான மகேஷ் பட்டின் மகள் பூஜா பட் வாரிசு அரசியல் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், “மக்கள் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிற வாரிசு அரசியல் பற்றி கருத்துச் சொல்லும்படி என்னிடம் சிலர் கேட்கின்றனர். ஒட்டுமொத்த திரைத்துறையைக் காட்டிலும் ஏராளமான புதிய திறமையான நடிகர்களையும், இசையமைப்பாளர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்ணாக, என்னால் இதற்குச் சிரிக்க மட்டுமே முடிகிறது. உண்மைகள் யாருக்கும் சென்றடைவதில்லை. மாறாக புனைவுகளே அதிகமாகச் சேர்கின்றன.

 

பட் குடும்பத்தினர் பிரபலமான நடிகர்களுக்கு எதிராக இருப்பதாகக் குற்றச்சாட்டுகளும், புதியவர்களை மட்டுமே அறிமுகப்படுத்தி அவர்களோடு பணிபுரிந்ததால் ஒதுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. இன்று அதே மக்கள் வாரிசு அரசியல் செய்கிறார்களா? கூகிள் செய்து பார்த்துவிட்டு ட்வீட் செய்யுங்கள் நண்பர்களே. யோசித்துப் பேசுங்கள் என்று கூட சொல்லப் போவதில்லை.

 

கங்கணாவை பொறுத்தவரை அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை, இல்லையென்றால் 'கேங்ஸ்டர்' படத்தில் அவர் விஷேஷ் பிலிம்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க மாட்டார். ஆம், அனுராக் பாசு தான் அவரை கண்டுபிடித்தார், ஆனா விஷேஷ் பிலிம்ஸ் அவருக்கு உறுதுணையாக நின்று படத்துக்கு முதலீடு செய்தது. இது சாதாரண விஷயம் அல்ல. அவருடைய எல்லா முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறோம்.

 

'சடக் 2' படத்தில் கூட சுனில் ஜீத் என்கிற ஒரு புதிய திறமையாளருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலிருந்து ஒரு இசை ஆசிரியர் எங்கள் அலுவலகத்துக்கு என்னைச் சந்திக்க நேரம் கூட அனுமதி வாங்காமல் ஒரு ஆர்மோனியம், ஒரு கனவு, இஷ்க் கமால் என்ற ஒரு அற்புதமான பாடலுடன் வந்தார். அதைக் கேட்டதுமே பிடித்துப் போன என் தந்தை அவரை படத்துக்கு ஈர்த்து விட்டார்.

 

எனவே வாரிசு அரசியல் என்ற வார்த்தையுடன் வேறு யாரையேனும் வம்பிழுக்கவும். பல ஆண்டுகளாக நாங்கள் அளித்த வாய்ப்பின் மூலம் திரைப்படங்களில் தங்களுக்கான வழியை அமைத்துக் கொண்டவர்களுக்கு எங்களைப் பற்றி தெரியும். அவர்கள் மறந்திருந்தால், அது அவர்களுக்குத் தான் நஷ்டம். எங்களுக்கல்ல” என்று தெரிவித்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.